மன்னார் மனிதப் புதைகுழி: சகல அறிக்கைகளும் வௌியாகும் வரை இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாது - சட்டத்தரணிகள்

by Staff Writer 08-03-2019 | 5:41 PM
Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான சகல அறிக்கைகளும் வௌியாகும் வரை அது குறித்து இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாது என காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். சகல அறிக்கைகளும் வௌியாகும் வரை பொறுமை காக்குமாறு, மன்னார் மனிதப் புதைகுழி வழக்கில் காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர். கார்பன் கால நிர்ணய அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் டீ. சரவணராஜாவிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சுமார் 350 வருடங்கள் தொடக்கம் 600 வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்தவர்களுடையவை என கார்பன் கால நிர்ணய அறிக்கையில் கண்டறியப்பட்டது. நவீன தொழில்நுட்பத்திற்கான உள்ளீடுகள், விஞ்ஞான ரீதியான கண்டுபிடிப்புகளும், மானுட தடயவியலுடன் தொடர்புடைய விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. இது தொடர்பில் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி வருவதாக, காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் அறிக்கையொன்றினூடாக இன்று தெரிவித்துள்ளனர். புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட வேறு சான்றுகள் மற்றும் தடயப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் முழுமையான ஆய்வறிக்கையின் பின்னரே இறுதித் தீர்மானத்திற்கு வர முடியும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனைய ஆய்வுகளின் அறிக்கை மற்றும் மனிதப் புதைகுழியில் பணியாற்றும் நிபுணர்களின் கருத்துகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.