அமுலுக்கு வந்த புதிய வரி அறவீடுகள்

வரவு செலவுத்திட்டம்: அமுலுக்கு வந்த புதிய வரி அறவீடுகள்

by Staff Writer 07-03-2019 | 7:30 AM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2019 வரவு செலவுத்திட்ட யோசனையின்படி, சில பொருட்களுக்கான வரி அறவீடுகள் நேற்று (06) முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, 2019 ஆம் ஆண்டில் நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், வரவு செலவுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள வரி திருத்தங்களுக்கு அமைய, மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி மற்றும் உற்பத்தித் தீர்வை திருத்தம் நேற்று முதல் செயற்படுத்தப்பட்டுள்ளது. Maruti Suzuki Wagon R இன் விலை 250,000 ரூபாவினாலும் Maruti Suzuki Alto வின் விலை 150,000 ரூபாவினாலும் Toyota Axio மற்றும் Toyota Aqua 600,000 ரூபாவினாலும் Toyota Premio மற்றும் Toyota CHR இன் விலை 700,000 ரூபாவினாலும் உயர்வடைந்துள்ளன. இதுதவிர, முச்சக்கரவண்டிக்கான உற்பத்தி தீர்வை 6 இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலத்திரனியல் வாகனங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், சிறிய ரக ட்ரக் வண்டிகளுக்கான உற்பத்தி தீர்வையும் குறைவடைந்துள்ளது. அத்துடன், பீடி இலை இறக்குமதியின்போது அறவிடப்படும் ஒரு கிலோவிற்கான 2,500 ரூபா செஸ் வரி, 3,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதி விசேஷ சாராயத்தை தவிர்ந்த ஏனைய மதுபானங்களுக்கான 3,300 ரூபா தீர்வை 3,500 ரூபாவாக நேற்று முதல் அதிகரிக்கப்பட்டள்ளது. பியர் ஒரு லீற்றருக்கான 2,400 ரூபா தீர்வை வரி, 2,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைத்தவிர, பழச்சாறு, மதுபானம், புகையிலை உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட சில உற்பத்திப் பொருட்களுக்கான சுங்க இறக்குமதி வரியும் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.