வடக்கின் பெருஞ்சமர்: சவாலான நிலையில் சென்.ஜோன்ஸ் அணி

by Staff Writer 07-03-2019 | 9:22 PM
Colombo (News 1st) 113 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறிய சென்.ஜோன்ஸ் அணி சவாலான நிலைக்கு உயர்ந்துள்ளது. யாழ். மத்திய கல்லூரிக்கும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 113 ஆவது வடக்கின் பெருஞ்சமர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி அணித்தலைவர் எஸ்.மதுஷன் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சிரமத்திற்குள்ளானது. முதல் 7 விக்கெட்களும் 90 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்ட நிலையில், தெய்வேந்திரம் டினோஷன் சென். ஜோன்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அவர் 134 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 பௌண்டரிகளுடன் 98 ஓட்டங்களைப் பெற்றார். சென்.ஜோன்ஸ் அணி 181 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. பந்துவீச்சில் இயலரசன் கமலரசன் 5 விக்கெட்களையும், விஜயகாந்த், வியாஷ்காந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் யாழ். மத்திய கல்லூரி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 59 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இயரலரசன் கமலராசா 25 ஓட்டங்களுடனும், ஜெயதர்ஷன் அன்ரனிதாஸ் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.