பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் 10 ஆம் திகதிக்குள் விடுதலையாக வாய்ப்பு?

by Bella Dalima 07-03-2019 | 7:00 PM
Colombo (News 1st) ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் எதிர்வரும் 10 ஆம் திகதி விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி புகழேந்தி கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிப்பதற்கான அழுத்தத்தை தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரயோகிக்க வேண்டுமென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். எடப்பாடியின் தலைமையிலான தமிழக அரசு குறித்த 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 161 சட்டத்தைப் பயன்படுத்தி ஆளுநருடைய ஒப்புதலுக்காக அனுப்பி 6 மாதங்களாகியும் அதில் கையெழுத்திடப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாகவும் பாட்டாலி மக்கள் கட்சி அ.தி.மு.க-வுடன் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தியுள்ளதாக சட்டத்தரணி புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னணியில், எழுவரும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் விடுதலையாவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவ்வாறில்லாமல் காலம் தாழ்த்தப்படுமாயின், தேர்தல்கள் ஆணையம் தேர்தலுக்கான திகதியை அறிவித்து விட்டால், விடுதலைக்கு வாய்ப்புக் குறைவு எனவும் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.