காபன் அறிக்கை: தகவல்களை வௌியிட முடியாது

கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பில் தகவல்களை வௌியிட முடியாது என தெரிவிப்பு

by Staff Writer 07-03-2019 | 1:10 PM
Colombo (News 1st) மன்னார் சதொச மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்பிலான காபன் பரிசோதனை அறிக்கை தொடர்பில் தற்போது தகவல்களை வௌியிட முடியாது என சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். மன்னார் சதொச மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்பிலான காபன் பரிசோதனை அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு கிடைத்துள்ளது. மன்னார் நீதிமன்றுக்கு கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கை பகிரங்க ஆவணம் என்பதால், விரும்பியவர்கள் விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்கனவே நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதன் பிரதிகள் நேற்று மாலை வேளையில், கிடைக்கப்பெற்றதாக சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார். எனினும், அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் வைத்தியர்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால், உடனடியாக இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள தரவுகள் குறித்து வெளியிட முடியாது என சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, 155 ஆவது நாளாகவும் இன்று அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த அகழ்வுப் பணிகளின்போது, 355 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 318 அகற்றப்பட்டு, மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திலுள்ள விசேட களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.