இலங்கை மத்திய வங்கியில் தடயவியல் கணக்காய்வு

இலங்கை மத்திய வங்கியில் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள வௌிநாட்டு நிறுவன சேவையைப் பெற்றுக்கொள்ள  அங்கீகாரம்

by Staff Writer 07-03-2019 | 10:11 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியில் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்வதற்காக வௌிநாட்டு நிறுவன சேவையைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமைய M. S .B .D. O இந்தியா மற்றும் M.S.K.P.M.G. ஶ்ரீலங்கா ஆகிய நிறுவனங்களிடம் இதற்கான ஒப்பந்தம் கையளிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னரும் இலங்கை மத்திய வங்கியில் கணக்காய்வுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச அனுபவம் வாய்ந்த நிறுவனங்களின் சேவையைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதேவேளை, மத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கை பிரிவை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விமான நிலையத்தின் வழிநடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய விமான சேவை அதிகார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கக் குழு மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான திட்டக் குழுவை நியமிக்கவும் ஏற்கனவே அங்கீகாரம் கிடைத்தது. குறித்த குழு தமது பரிந்துரைகளை உள்ளடக்கி தயாரித்த அறிக்கைக்கு அமைய, எதிர்கால வழிநடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கே அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.