இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி

by Staff Writer 07-03-2019 | 7:49 AM
Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க களத்தடுப்பைத் தெரிவுசெய்தார். இலங்கை அணியில் அவிஷ்க பெர்னாண்டோ, கசுன் ராஜித ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதுடன் உபுல் தரங்கவும் லக்ஸான் சந்தகேனும் நீக்கப்பட்டனர். அணித்தலைவர் பெப் டு பிலெசி 57 ஓட்டங்களைப் பெற்றதுடன் சர்வதேச ஒருநாள் அரங்கில் 5,000 ஓட்டங்களைக் கடந்தார். தென்னாபிரிக்க அணி ஒரு கட்டத்தில் 36.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களுடன் வலுவாக இருந்தாலும் எஞ்சிய 5 விக்கெட்டுகளும் 31 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. அதன்படி, தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் 45.1 ஓவரில் 251 ஓட்டங்களுடன் முடிவுக்குவந்தது. பந்துவீச்சில் திசர பெரேரா 3 விக்கெட்களையும் லசித் மாலிங்க, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் முதல் 5 விக்கெட்களும் 92 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. குசல் ஜனித் பெரேரா 8 ஓட்டங்களுடனும் ஓஷத பெர்ணான்டோ 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 4 ஓட்டங்களுக்குள் இலங்கை அணி 4 விக்கட்டுக்களை இழந்தது. ககிசோ ரபாடா 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 32.2 ஓவர்களில் இலங்கை அணியின் சகல வீரர்களும் ஆட்டமிழந்த நிலையில், 138 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை அணியால் பெறமுடிந்தது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.