வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சம்பந்தனும் சுமந்திரனும் மாறுபட்ட கருத்து

by Staff Writer 06-03-2019 | 7:49 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று (05) சமர்ப்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்கு பகுதிகளைக் கட்டியெழுப்ப போதியளவு ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறியிருந்தார். எவ்வாறாயினும், வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாக யாழ்ப்பாணத்தில் இருந்து வௌியாகும் பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பொறுப்புணர்ச்சியுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரியான முறையில் செயற்படுத்தினால் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது மாத்திரமின்றி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களையும் அதிகரிக்க முடியும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த திட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் வரவேற்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.