மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்

மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்

by Fazlullah Mubarak 04-03-2019 | 8:59 AM

Colombo (News 1st) இந்துக்கள் சிவபெருமானுக்காக அனுஸ்டிக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்.

வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்த நாளாக சிவராத்திரியை இதிகாசங்கள் கூறுகின்றன. சிவராத்திரி தினத்தன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் பெறலாம் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது இந்துக்களில் நம்பிக்கை. சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம் என கருதப்படுகின்றது. இப்படி 24 தொடர்ச்சியாக வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பதுடன், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடையலாம் எனவும் புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு, இன்று ஆலயங்களில் நான்கு யாம பூசைகளும் விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன.