by Fazlullah Mubarak 04-03-2019 | 8:44 AM
பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ராவை யுனிசெப் நல்லெண்ணத் தூதுவர் பதவியிலிருந்து விலகுமாறு பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
இந்திய தாக்குதலை அவர் நியாயப்படுத்தியது இதற்கான காரணமாகும்.
விமானப்படைத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ராவை யுனிசெஃப் நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து விலகுமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் யுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா செயற்பட்டு வருகின்றார்.
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை வீரர்கள் கொடுத்த பதிலடிக்கு தனது டுவிட்டரில் ஜெய் ஹிந்த் என பதிவிட்டிருந்ததுடன் இந்தியன் ஆர்ம்ட் போர்ஸ் என ஹேஷ் டெங்கையும் இணைத்திருந்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதலின்போது நடுநிலையாக செயற்படாமல் ஒருதலைபட்சமாக அவர் நடந்துகொண்டமை கண்டிக்கத்தக்கது என பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக இணையத்தளத்தில் கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை பாகிஸ்தான் ஆரம்பித்துள்ளது.
அத்துடன், அவர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக பிரியங்கா மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரபலங்கள் சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலரும் விமானப்படைத் தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.