25 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் சிரச FM

by Staff Writer 02-03-2019 | 4:16 PM
Colombo (News 1st) எமது சகோதர வானொலி சேவையான சிரச FM 25 ஆவது வருடப் பூர்த்தியை இன்று கொண்டாடுகின்றது. நாட்டின் தொடர்பாடல் துறையில் புதிய பரிணாமத்தை வழங்கி, 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி சிரச வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி 24 மணித்தியாலங்களும் ஒலிபரப்பாகும் முதலாவது சிங்கள வானொலி சேவையாக சிரச FM காற்தடம் பதித்தது. சிறந்த நிகழ்ச்சிகளின் ஊடாக மக்களின் மனங்களைக் கவர்ந்துள்ள சிரச FM பல விருதுகளுக்கும் பாத்திரமானது. 25 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் சிரச FM-இற்கு நியூஸ்ஃபெஸ்ட் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. இதேவேளை, சிரச FM-இன் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 25 இசைக்குழுக்கள், 25 பாடகர் பாடகிகளின் மாபெரும் இசை நிகழ்ச்சி இன்று மாலை நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது. இதேவேளை, சிரச FM-இன் பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தியின் 5 திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. திருகோணமலை மற்றும் ஹட்டன் பகுதிகளில் குடிநீர் திட்டங்களும், புத்தளம் - ஆத்துகம பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலை கட்டிட புனரமைப்புத் திட்டமும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை தவிர, கதிர்காமம் கெளதமிபுர பகுதியிலுள்ள மக்களுக்கான குடிநீர் திட்டம், மாத்தறை பிட்டதூவ பகுதிக்கான நூலக கட்டமொன்றை நிர்மாணிக்கும் திட்டம் ஆகியனவும் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.