ரயில் மார்க்கங்களில் தன்னியக்க தொடர்பாடல் கருவிகள்

யானைகளைப் பாதுகாக்க கிழக்கு மற்றும் மன்னார் ரயில் மார்க்கங்களில் தன்னியக்க தொடர்பாடல் கருவிகள் பொருத்தம் 

by Staff Writer 02-03-2019 | 4:37 PM
Colombo (News 1st) யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பதைத் தவிர்க்க கிழக்கு மற்றும் மன்னார் ரயில் மார்க்கங்களில் தன்னியக்க தொடர்பாடல் கருவிகளைப் பொருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த வாரமளவில் குறித்த கருவிகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, ரயிலில் காட்டு யானைகள் மோதுவதை தவிர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பொறியியலாளர் இரோஷ் பெரேரா தெரிவித்தார். தன்னியக்க தொடர்பாடல் கருவி மூலம், ரயில் மார்க்கத்திற்கு அருகில் யானைகள் இருப்பின், அது குறித்து மத்திய நிலையத்திற்கு அறிவிக்கப்படும். பரீட்சார்த்த நடவடிக்கைகளில் இந்தத் திட்டம் வெற்றியளித்ததால், கருவிகளைப் பொருத்துவதற்கு தீர்மானித்ததாக பொறியியலாளர் இரோஷ் பெரேரா குறிப்பிட்டார். தற்போது, பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக இரண்டு பகுதிகளில் மாத்திரம் தன்னியக்க கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ரயில் மார்க்கங்களை யானைகள் கடக்கும் போது தண்டவாளங்களில் அவற்றின் கால்கள் இறுகாமல் இருக்க கற்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொறியியலாளர் இரோஷ் பெரேரா மேலும் கூறினார்.