மங்கள சமரவீரவின் திறமையும் அறிவும் அனுபவமும் நாட்டிற்குத் தேவை: ஜனாதிபதி

by Bella Dalima 28-02-2019 | 8:12 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்க்கை பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வைபவம் ஒன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் இந்த நிகழ்வில் பிரதம உரை நிகழ்த்தினார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் வாழ்த்துச் செய்தியும் இங்கு வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலுக்கு அப்பால் பழகும் போது மிகவும் சிநேகப்பூர்வமாக செயற்படும் ஒருவர் எனவும் மங்கள சமரவீரவின் திறமையும் அறிவும் அனுபவமும் நாட்டிற்குத் தேவை எனவும் குறிப்பிட்டார். தமக்கு எதிரான விமர்சனங்களின் போது மங்கள சமரவீர முன்னிலை வகிக்கும் ஒருவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். எனினும், அவர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் கனவுடன் பயணிக்கும் ஒருவர் எனவும் பிரதமர் தெரிவித்தார்.