உயிரிழந்த வீரர்களுக்காக லதா மங்கேஷ்கர் நிதியுதவி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு லதா மங்கேஷ்கர் 1 கோடி ரூபா நிதியுதவி

by Bella Dalima 28-02-2019 | 4:06 PM
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 துணை இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி இந்திய ரூபா நிதி வழங்குவதாக பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் அறிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர். வீர மரணம் அடைந்த அந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய மத்திய-மாநில அரசுகள் நிதி உதவி வழங்கியுள்ளன. மேலும், அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, வீர மரணமடைந்த 40 வீரர்களின் குடும்பத்தினருக்கு திரைப்படத்துறையினரும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றார்கள். நடிகர் அபிதாப் பச்சன் 2.1 கோடி ரூபா நிதி உதவி வழங்கினார். நடிகர் அக்ஷய் குமார் 5 கோடி ரூபா வழங்கினார். சல்மான் கான், கிரிக்கெட் வீரர் சேவாக், குத்துச்சண்டை வீரர் வீரேந்திரசிங் ஆகியோரும் நிதி உதவி வழங்கினார்கள். இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேரின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி லதா மங்கேஷ்கரின் தந்தை இறந்த தினமாகும். இதையொட்டி இந்த உதவியை அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.