மதுஷ் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 27-02-2019 | 2:11 PM
Colombo (News 1st) துபாயில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலும் ஒரு மாதத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரான அமல் பெரேரா மற்றும் அவரின் மகன் நதீமால் பெரேரா சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி சாப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார். துபாய் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சாப்திக வெல்லப்பிலி மேலும் குறிப்பிட்டுள்ளார். அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அந்நாட்டு பொலிஸாரினால் கோரப்பட்டுள்ள அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். குறித்த அறிக்கையினூடாக இவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்படுமாயின் அந்நாட்டு சட்டங்களுக்கு அமைய 3 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், தலா 10,000 திர்ஹாம் அபராதம் செலுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.