அரசாங்கத்தில் அவர்கள் இருக்கும் வரையில் ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்காது: ஜனாதிபதி

by Bella Dalima 27-02-2019 | 8:07 PM
Colombo (News 1st) தற்போதைய அரசாங்கம் இருக்கும் வரையில் ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மத்திய வங்கி மோசடி என்பது கொலன்னாவை குப்பை மேட்டை விட மிகப்பெரிய குப்பை மேடு என குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறான பெரிய குப்பை மேட்டை அரசாங்கம் தன் மீது கொட்டிக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவசரமாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து குற்றவாளிகள் யார் என்பதனை தாம் நாட்டிற்கு காண்பித்த போதிலும், அரசாங்கத்தில் இருக்கும் சிலரின் செயற்பாட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது போயுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவ்வாறானவர்கள் இல்லாத அரசாங்கமொன்று வர வேண்டும், அல்லாவிட்டால் அர்ஜுன மகேந்திரனைக் கொண்டு வரும் அரசாங்கம் ஒன்று நாட்டில் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற கணக்காய்வு சேவை சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முறிகள் மோசடி தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.