ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவாகிய முறைப்பாடுகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவாகிய முறைப்பாடுகள்

by Staff Writer 26-02-2019 | 7:40 AM
Colombo (News 1st) ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் சில தரப்பினர் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். சுகாதார அமைச்சில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான டெப் வழங்கும் திட்டம் மற்றும் கல்வி அமைச்சினூடாக முறைகேடுகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து நேற்று ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கிடைத்துள்ள முறைபாடுகளுக்கு அமைய, முதற்கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மேலும் இரு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, 4 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலையின் உயரதிகாரி ஒருவர் உள்ளிட்ட சிலரினால் பில்லியன் கணக்கான நிதி மோசடி செய்யப்பட்டமை மற்றும் 13,200 லீற்றர் எண்ணைய் பவுசரை வௌியில் கொண்டுசென்று விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் மின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக மின்சாரத்தைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடு மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த 4 ஆண்டு காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 150 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 2015 ஜனவரி முதல் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான 4 வருடங்களுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் செயற்பாடுகள், நிறுவன நம்பிக்கையை மோசடி செய்தல் முறையற்ற வளப் பாவனை அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் மக்களின் முறைப்பாடுகள் கோரல் மற்றும் அவற்றை முழுமையாக விசாரித்தல் என்பன இவ் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். இந்தநிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திதகி வரை முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.