வீதி விபத்து - மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன் கைது

மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகனே குற்றவாளி

by Fazlullah Mubarak 25-02-2019 | 2:19 PM

பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் நேற்று நால்வர் கைது செய்யப்பட்டனர். சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தை செலுத்தியதாக தெரிவித்து பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகனும், கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குகின்றார். அத்துடன், வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அதில் பயணம் செய்த 23 வயதான இளைஞரும் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குகின்றனர். கடமை நிமித்தம் மோட்டார்சைக்கிளில் பம்பலபிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பொரளை போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரத்சந்திர பம்பலபிட்டி டீப்லி புல்லஸ் சந்தியில் விபத்துக்கு உள்ளானார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.