முறிகள் மோசடியுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை

மத்திய வங்கியின் முறிகள் மோசடியுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை

by Staff Writer 25-02-2019 | 8:38 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர்கள் இருப்பின், அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று (25) உத்தரவிட்டுள்ளது. முறிகள் மோசடியுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் கடமை எனவும் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். வழக்கின் சந்தேகநபர்களான பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரும் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர். முறிகள் மோசடிக்கு மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலரும் பொறுப்புடையவர்கள் என மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளரின் அறிக்கைக்கிணங்க தமது தரப்பினர் இருவருக்கு எதிராக மாத்திரமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி சஜித ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை கருத்தில்கொள்ளாமல், ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். முறிகள் மோசடி தொடர்பில் மேலும் சந்தேகநபர்கள் இருப்பின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.