பொலிஸ் அதிகாரி விபத்து - சந்தேகநபர் நீதிமன்றுக்கு

பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய நபர் இன்று நீதிமன்றத்திற்கு

by Fazlullah Mubarak 25-02-2019 | 7:44 AM

பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் 27 வயதுடைய மகன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். மாலபே பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் பிறந்தநாள் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் திரும்பும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட நபரா வாகனத்தை செலுத்தினார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியச்சகர் ருவன் குணசேக்க குறிப்பிட்டார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கடமை நிமித்தம் மோட்டார் சைக்கிளில் பம்பலபிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பொரள்ளை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரத்சந்திர பம்பலபிட்டி டீப்லி புல்லஸ் சந்தியில் விபத்துக்கு உள்ளானார். இதன்போது பலத்த காயமடைந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.