இன்று பிரதமர் வசமாகும் ரஞ்சனின் குற்றச்சாட்டுக்கள்

ரஞ்சனின் குற்றச்சாட்டுக்கள் இன்று பிரதமரின் கரங்களுக்கு செல்கின்றது

by Fazlullah Mubarak 25-02-2019 | 7:48 AM

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவின் அறிக்கையை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க தாம் வௌியிட்ட கருத்து தொடர்பில், குழு முன்னிலையில் தௌிவுபடுத்தியுள்ளதாக குறித்த குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார். கொக்கெய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டுள்ளதாக பேராசிரியர் ஆஷூ மாரசிங்க கூறியுள்ளார். அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதமரினால் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினால் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் நியமிக்கப்பட்ட குறித்த குழுவில் அமைச்சர் இரான் விக்ரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூபோத மாரசிங்க மற்றும் நிஷ்ஷங்க நாணயக்கார ஆகியோர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். இந்த குழு கடந்த தினத்தில் முதல்தடவையாக, பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது. இந்த குழு முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இதன்போது வாக்குமூலம் அளித்திருந்தார்.