இலங்கைக்கு எதிரான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

by Fazlullah Mubarak 25-02-2019 | 8:09 AM

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடரின் 3 போட்டிகளுக்கான குழாம் அறிவிக்கப்ப்டடுள்ளது. பப் டு பிளசிஸின் தலைமையில் 14 வீரர்கள் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். உபாதை காரணமாக இலங்கை அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக களமிறங்கவுள்ள தென்னாபிரிக்க அணியில் 5 துடுப்பாட்ட வீரர்கள், 6 பந்துவீச்சாளர்கள் மற்றும் சகலதுறை வீரர்கள் மூவர் அடங்குகின்றனர். குழாத்தில் ஜே. பி டுமினி இணைக்கப்படவில்லை. வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேன் தென்னாபிரிக்க குழாத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், வியர்ன் மோல்டரும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இலங்கை அணியுடனான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக வேகப்பந்து வீச்சாளர்களான இம்ரான் தஹீர் மற்றும் ட்ப்ரயஸ் ஷெம்ஸ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். அணித்தலைவர் பப் டு பிளசிஸ், குவின்டன் டி கொக், மற்றும் டேவிட் மிலர் ஆகிய துடுப்பாட்ட வீரர்களும் அணியில் உள்ளனர். இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி ஜொஹன்னஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளது.