மணல் அகழ்விற்கான அனுமதி வழங்குவதில் திருப்பம்

திருமலையில் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதில் மாற்றம்

by Staff Writer 24-02-2019 | 7:45 AM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்களை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருகோணமலையில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற மணல் அகழ்வைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் கடந்த சில தினங்களாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபை, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஆகியவற்றின் 2 குழுக்களினால் 500 பகுதிகளில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள இறுதிக் கூட்டத்தில், அனுமதி வழங்கக்கூடிய பத்திரங்களுக்கு மாத்திரம் மீண்டும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு மேலும் 1,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.