சிகரட் துண்டால் 300க்கும் அதிகமான கார்கள் தீக்கிரை

பெங்களூரில் சிகரட் துண்டால் 300-இற்கும் அதிகமான கார்கள் தீக்கிரையாகின

by Bella Dalima 23-02-2019 | 9:05 PM
பெங்களூரில் சிகரட் துண்டால் ஏற்பட்ட தீ விபத்தில் 300-இற்கும் அதிகமான கார்கள் எரிந்துள்ளன. பெங்களூரின் ஏலகங்கா பகுதியில் விமான கண்காட்சியொன்று கடந்த புதன்கிழமை (20) முதல் இடம்பெற்று வருகின்றது. இந்த கண்காட்சியை பார்வையிட சென்றவர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில், எரிந்த நிலையில் புற்தரையில் போடப்பட்ட சிகரட் துண்டொன்றிலிருந்து தீ பரவியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் எரிய ஆரம்பித்து முதலில் சுமார் 20 முதல் 30 கார்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் ஆகியன தீக்கிரையாகியுள்ளன. இதன் பின்னர், பலமான காற்று வீசியதால் தீ ஏனைய கார்களுக்கும் பரவியதில் 300-இற்கும் அதிகமான கார்கள் எரிந்துள்ளன. நாளை வரை இந்த கண்காட்சி இடம்பெறவிருந்த நிலையில், தீ விபத்தினால் கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.