by Staff Writer 23-02-2019 | 3:45 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி கொண்ட முதல் ஆசிய அணியாக இலங்கை வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தென்னாபிரிக்காவிற்கு எதிராக போர்ட் எலிசெபெத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை இலங்கை 8 விக்கெட்களால் வென்றது.
இதன் மூலம் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்திய மூன்றாவது அணியாகவும் இலங்கை அணி வரலாற்றில் இணைந்தது.
அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்து அணியும் ஏற்கனவே இந்த சிறப்பைப் பெற்றுள்ளன.
போட்டியில் 197 ஓட்டங்களை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றியை அடைந்தது.
ஓசத பெர்னாண்டோ 75 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 83 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.
இதன் போது இவர்கள் வீழ்த்தப்படாத மூன்றாம் விக்கெட்டிற்காக 148 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.