கிரிக்கெட் தேர்தல் குறித்த நீதிமன்ற அறிவித்தல்

கிரிக்கெட் தேர்தல் நாளை நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

by Staff Writer 20-02-2019 | 12:42 PM
Colombo (News 1st) இரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு அமைவாக நாளைய தினம் (21) இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (20) அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் தேர்தலுக்காக மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக இரண்டு தரப்பினரும் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, மொஹான் டி சில்வா செயலாளர் பதவிக்கும் ரவீன் விக்ரமரத்ன உப தலைவர் அல்லது உப செயலாளர் பதவிக்கும் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர மற்றும் நீதிபதி அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.