by Staff Writer 17-02-2019 | 7:17 AM
Colombo (News 1st) நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குப் போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லை என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த நேற்று சிரச வானொலியில் ஒலிபரப்பான நிகழ்வில் கலந்துகொண்டபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் மாத்திரம் 900 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் இதன்போது கூறினார்.
கொள்கலன்கள் ஊடாகவும் விமானங்கள் ஊடாகவும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அவற்றினை கண்டறிவதற்குத் தேவையான நவீன உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் சஜீவ மெதவத்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தபால் சேவை ஊடாக நாளாந்தம் பொருட்கள் பரிமாற்றப்படும் நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், தபால் பரிமாற்றத்தினூடாகவும் போதைப் பொருளை கடத்துவதாக அவர் கூறியுள்ளார்.
போதுமான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட நவீன உபகரணங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், போதைப்பொருள் கடத்தலை சுற்றிவளைக்கும் நடவடிக்கை மேலும் வெற்றியளிக்கும் எனவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.
- பொலிஸ்