அமல் பெரேராவையும் மகனையும் பிணையில் விடுவிக்க விண்ணப்பம்

by Staff Writer 15-02-2019 | 4:06 PM
Colombo (News 1st) துபாயில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரின் புதல்வரான நதிமால் பெரேரா ஆகியோரை உடனடியாக பிணையில் விடுவிப்பதற்கு விண்ணப்பிக்கவுள்ளதாக அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷாப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28 ஆம் திகதி வரை குறித்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு குறிப்பிட்டார். போதைப்பொருள் தொடர்பில் அந்நாட்டு சட்டத்தின் பிரகாரம், அவர்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஷாப்திக வெல்லப்பிலி கூறினார். அமல் பெரேராவும் அவரின் புதல்வரான நதிமால் பெரேராவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இதுவரை அந்நாட்டு பொலிஸாரால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். இதேவேளை, அமல் பெரேரா மற்றும் நதிமால் பெரேராவுடன் கைது செய்யப்பட்ட பாதாளக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கன்சியூலர் ஜெனரல் அலுவலகம் மற்றும் அபுதாபியிலுள்ள தூதரகம் ஊடாக பரிசீலிக்கப்படுவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 31 சந்தேகநபர்களும் கடந்த 4 ஆம் திகதி இரவு கொக்கைன் போதைப்பொருளுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர்.