காபன் அறிக்கை இன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பு

சதொச மனித புதைகுழி அகழ்வு: காபன் அறிக்கை இன்றைய நாளுக்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

by Staff Writer 14-02-2019 | 1:20 PM
Colombo (News 1st) மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை இன்றைய நாளுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக, அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மனித எச்சங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த 25 ஆம் திகதி கையளிக்கப்பட்டன. குறித்த மனித எச்சங்கள் மீதான காபன் பரிசோதனைக்கு 2 வார கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. அதற்கமைய, இன்றைய தினத்திற்குள் குறித்த ஆய்வறிக்கையை இணையத்தளத்தினூடாகப் பார்வையிட முடியும் என சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆய்வறிக்கையைப் பார்வையிடுவதற்கான இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், அறிக்கையின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகளை தனக்கும், மன்னார் மாவட்ட நீதவானுக்கும் பொதி சேவையூடாக அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித புதைகுழியில் 145 ஆவது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவரையில் 321 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 309 மனித எச்சங்கள் குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். அவற்றில் 28 மனித எச்சங்கள் சிறார்களுடையது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்