இலத்திரனியல் அரிவாள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை

by Bella Dalima 14-02-2019 | 7:25 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள மரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இலத்திரனியல் அரிவாள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை ​மேற்கொண்டுள்ளார். சில நாடுகளில் மரங்களை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இலத்திரனியல் அரிவாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாடுகளுக்கு அவற்றைக் கொண்டு செல்லவோ, அங்கேயே தயாரிக்கவோ முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எனினும், இதுபற்றி நாட்டில் எந்தவொரு அரசாங்கத்தாலும் இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார். மரங்களை வெட்டும் இயந்திரங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை இறக்குமதி செய்வதை முழுமையாகக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். போதைப்பொருள் ஒழிப்பு, சூழல் பாதுகாப்பு என்பன யாரேனும் ஒருவரால் வீணடிக்கப்படும் போது, சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அநுராதபுரம் மாவட்டத்திற்கான சுற்றாடல் மாநாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். சுற்றாடல் மாநாடு இன்று ஜனாதிபதி தலைமையில் சல்காது விளையாட்டரங்கில் நடைபெற்றது.