ஆசிரியர்களுக்கான தகைமை தொடர்பில் கல்வி அமைச்சு

ஆசிரியர் தொழிலுக்கான தகைமையுடையவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு

by Staff Writer 13-02-2019 | 7:54 AM
Colombo (News 1st) சில பாடங்களுக்கான ஆசிரியர்களைத் தொழிலில் இணைத்துக்கொள்ளும் போது உரிய தகைமையுடையவர்கள் விண்ணப்பிப்பதில்லை என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேடமாக உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்பிப்பதற்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும்போது இந்த நிலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தகவல் தொழினுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரிவுகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பதற்காக தகைமையுடையவர்களை இணைத்துக்கொள்ளும்போது இதேநிலை தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் 15,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்பும் பல்வேறு சந்தரப்பங்களில், தகைமையற்ற பலர் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தொழிலுக்கான ஊதியம் மிகவும் குறைந்தமட்டத்தில் காணப்படுவதால் தகைமையுடைய பலர் விண்ணப்பிப்பதில்லை என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வொன்றை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.