மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் மீதான விசாரணை நிறைவு

மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் மீதான துபாய் பொலிஸாரின் விசாரணை நிறைவு

by Staff Writer 11-02-2019 | 6:27 PM
Colombo (News 1st) துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருமான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எனினும், சந்தேகநபர்களை துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான திகதி தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. மாகந்துரே மதூஷுடன், பிரபல பாடகரான அமல் பெரேரா, அவருடைய மகனான நந்திமால் பெரேரா மற்றும் நடிகர் ரயன் வென்ங் ரோயன் உள்ளிட்ட சந்தேகநபர்கள் கடந்த 5 ஆம் திகதி துபாயில், அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரபல பாடகரான அமல் பெரேரா மற்றும் அவருடைய மகனான நந்திமால் பெரேரா ஆகியோர் சார்பில் துபாய் பொலிஸாரிடம் ஆவணங்களை சமர்பிப்பதற்கு சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன உள்ளிட்ட குழுவினர் துபாயிற்கு சென்றுள்ளனர். இதேவேளை, துபாயில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன நியூஸ்பெஸ்ட்டிற்கு குறிப்பிட்டார். எனினும், கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுளள்ளார். இதேவேளை, மாகந்துரே மதூஷ் சார்பில் தாம் ஆஜராகுவதற்கு துபாய் வருகை தந்துள்ளதாக வௌியாகியுள்ள தகவல் பொய்யானது எனவும் சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்துள்ளார்.