சென்சோ இயந்திரத்திற்கு அனுமதிப்பத்திரம் கட்டாயம்

மரம் வெட்டும் இயந்திரத்திற்கு அனுமதிப் பத்திரம் பெறுவது கட்டாயம்

by Staff Writer 11-02-2019 | 5:56 PM
Colombo (News 1st) மரம் வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சென்சோ (SHENSO) இயந்திரத்துக்கு அனுமதிப்பத்திரம் பெறுவதை கட்டாயமாக்கும் சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் இயந்திரத்தை முன்னிலைப்படுத்தி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும். அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் சென்சோ இயந்திரங்களை வைத்துள்ளவர்கள் தொடர்பிலான பெயர்பட்டியல் பேணப்படவுள்ளதுடன், இதற்கிணங்க குறித்த இயந்திரங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. அனுமதிப்பத்திரமின்றி இயந்திரத்தைப் பயன்படுத்துபவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட மாநாட்டில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியின் நலன் கருதியே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.