திருக்குறளால் மோடியும் சிதம்பரமும் மோதல்

திருக்குறளால் மோடியும் சிதம்பரமும் மோதல்

by Fazlullah Mubarak 11-02-2019 | 8:56 AM

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திருக்குறளுக்கு முன்னாள் இந்திய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றுமொரு திருக்குறளால் பதில் வழங்கியுள்ளார்.

வெள்ளத்தனைய மலர்நீட்டம்... என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு, எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்... என்ற திருக்குறலாள் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பதிலளித்துள்ளார். தமிழகத்தின் திருப்பூரில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு' என்ற திருக்குறளை கூறி கட்சியினர் மத்தியில் உரையாற்றியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், 'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற திருக்குறளை தமது டுவிட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார். இன்றைய ஆட்சியாளர்களை கருத்தில் கொண்டு, திருவள்ளுவர் அன்றே இதை சொன்னாரோ? எனவும் ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார். இதேவேளை, திருப்பூர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடல் முதல் வானம் வரை காங்கிரஸ் கட்சி பல ஊழல்களை செய்துள்ளது என விமர்சித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன், கடந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்து அக்கறை செலுத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.