எரிபொருள் விலையில் மாற்றம்  - நிதி அமைச்சு

எரிபொருள் விலையில் மாற்றம் - இன்று புதிய விலைப்பட்டியல்

by Fazlullah Mubarak 11-02-2019 | 8:43 AM

Colombo (News 1st) சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கு காணப்படும் விலையுடன் ஒப்பிட்டு அமுல்படுத்தப்படும் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று (11) புதிய விலைப்பட்டியல் அறிவிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

விலைச் சூத்திரத்திற்கான குழு இன்று பிற்பகல் கூடவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜனவரி மாதம் எரிபொருளின் விலை குறைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சிங்கப்பூர் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து காணப்பட்டதாகவும் நிதி அமைச்சு கூறியுள்ளது. 10 தொடக்கம் 15 அமெரிக்க டொலர் வரையில் தற்போது எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய, ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 62.10 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஒக்டேய்ன் 92 மற்றும் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் இரண்டு ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசல் இரண்டு ரூபாவாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் மூன்று ரூபாவாலும் கடந்த மாதம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.