முறிகள் மோசடி தொடர்பில் கசியும் புதிய தகவல்கள்

5.8 பில்லியன் ரூபா நிதி இழப்பை மீளப்பெறுமா அரசாங்கம் - தகவல் கசிகிறது

by Fazlullah Mubarak 10-02-2019 | 8:08 PM

முதலாவது முறிகள் மோசடி இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் சண்டே ரைம்ஸ் பத்திரிகை இன்று முறிகள் மோசடி தொடர்பில் வௌிக்கொணர்வொன்றை பிரசுரித்துள்ளது.

முறிகள் மோசடியினூடாக இடம்பெற்ற 5.8 பில்லியன் ரூபா நிதி இழப்பை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து மீள அறவிடும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தயாராகியுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை செய்திக்கிணங்க பதிவு பங்கு பரிவர்த்தனை கட்டளைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இடையில் கடந்த வௌ்ளிக்கிழமை கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. இதில், பதிவு மற்றும் பங்குப் பரிவர்த்தனை கட்டளைச் சட்டத்தின் 21/டீ/5 சரத்திலுள்ள பொறுப்பு என கூறப்படும் லியபிலிடி என்பதற்குப் பதிலாக நட்டம் எனப்படும் டெமேஜஸ் என்ற பதத்தை இணைப்பதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தை மேற்கொள்வதற்காக இந்த கலந்துரையாடலின்போது குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டமாஅதிபர் திணைக்களம், மத்தி வங்கி மற்றும் திறைசேரியின் அதிகாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எந்த அடிப்படையில் பங்குபற்றினார்? கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைக்கிணங்க முறிகள் மோசடியின் மூலம் ஏற்பட்ட இழப்பை மதிப்பிட முடியாது. அவ்வாறான பின்புலத்தில் 8. 5 பில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொள்வதால் மாத்திரம் நோக்கத்தை நிறைவேற்றுவது நியாயமானதா? முதலாவது முறிகள் மோசடி இடம்பெற்று 4 வருடங்கள் நிறைவடைவதற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக யாரை பாதுகாப்பதற்காக பிரதமர் முயல்கின்றார்.??

ஏனைய செய்திகள்