ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் 20 இலட்சம் ரூபா சம்பளம் பெறும் 38 ​பேர்: சுனில் ஹந்துன்நெத்தி வௌிக்கொணர்வு

by Bella Dalima 08-02-2019 | 8:51 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் 20 இலட்சம் ரூபா சம்பளம் பெறும் 38 ​பேர் உள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியளவில் 20 இலட்சத்திற்கும் அதிக சம்பளம் பெறும் 38 பேர் இருந்ததாகவும் 10 இலட்சத்திற்கும் அதிக சம்பளம் பெறும் 209 பேர் இருந்ததாகவும் அவர்களில் பலர் விமானிகள் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார். பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவரின் மாதாந்த சம்பளம் 130,000 ஆகும். எனினும், எஸ்.ரத்வத்த, ராமச்சந்திரன் ஆகியோருக்கு 20 இலட்சம் ரூபா சம்பளமும் பத்மபெருமவுக்கு 22 இலட்சம் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாளாந்தம் கோடிக்கணக்கில் நட்டத்தை எதிர்நோக்கும் நிறுவனத்தில் நாட்டின் ஜனாதிபதிக்கோ அமைச்சருக்கோ வழங்கப்படாத சம்பளத் தொகை பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இன்றைய பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் அறிக்கை தொடர்பில் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.