மின்தூக்கி செயலிழந்தமை தொடர்பில் விசேட விசாரணை

பாராளுமன்ற மின்தூக்கி செயலிழந்தமை தொடர்பில் விசேட விசாரணை

by Bella Dalima 08-02-2019 | 3:37 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தின் மின்தூக்கி செயலிழந்தமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக பாராளுமன்ற நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மின்தூக்கி செயலிழந்தமை தொடர்பில் பொறியியலாளர் பிரிவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம், அதிகாரியொருவர் இந்த சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவராயின், அதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். மின்தூக்கியை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளை வரவழைத்து, மின்தூக்கி செயலிழந்தமைக்கான காரணம் யாதென விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த மின்தூக்கி 35 வருடங்கள் பழமைவாய்ந்தது என பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் மின்தூக்கி செயலிழந்ததால், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுமார் 20 நிமிடங்கள் மின்தூக்கிக்குள் அகப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று (07) குற்றச்சாட்டு முன்வைத்திருந்தனர்.