அரசியலில் களமிறங்கும் தாய்லாந்து இளவரசி

தாய்லாந்து வரலாற்றில் முதன்முறையாக அரசியலில் களமிறங்கும் இளவரசி

by Bella Dalima 08-02-2019 | 4:49 PM
தாய்லாந்தில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டு இளவரசி உபொல்ரத்தனா ராஜகன்ய சிறிவதனா பர்னாவதி (Ubolratana Rajakanya Sirivadhana Barnavadi) போட்டியிடவுள்ளார். தாய்லாந்து வரலாற்றிலேயே அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் நேரடி அரசியலில் களமிறங்குவது இதுவே முதன்முறையாகும். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ராவின் (Thaksin Shinawatra) ஆதரவாளர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தாய் ரக்ஷா சார்ட் (Thai Raksa Chart) என்ற கட்சியினூடாக இவர் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார். 67 வயதான இவர் அரசர் மஹா வஜிரலங்கோர்னின் (Maha Vajiralongkorn) மூத்த சகோதரியாவார். 1972 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜை ஒருவரை மணம் முடித்துக்கொண்ட காரணத்தால் அரச பட்டத்தைத் துறந்த இவர், 1990 ஆம் ஆண்டில் விவாகரத்துப் பெற்று மீண்டும் தாய்லாந்திற்குத் திரும்பினார். அரச குடும்பத்திற்கான பட்டம் அவருக்கு கிடைக்காத போதும் நாட்டு மக்கள் அவரை இராஜ மரியாதையுடன் நடத்தி வருகின்றனர்.