நட்ட ஈடு கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்

அழிவடைந்த நெற்பயிர்களுக்கு நட்ட ஈடு கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்: பி.ஹரிசன்

by Bella Dalima 08-02-2019 | 6:42 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் வௌ்ளத்தினால் முழுமையாக அழிவடைந்த நெற்பயிர் செய்கைகளுக்கு 40,000 ரூபா நட்ட ஈடு வழங்குவதற்காக 10 கண்காணிப்புக் குழுக்களை நியமித்து, அழிவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டார். நட்ட ஈட்டினை வழங்கும் செயற்பாடுகள் 14 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறு நட்ட ஈடு கிடைக்காதவர்கள் எவரேனும் இருந்தால் மேன்முறையீடு செய்ய முடியும் எனவும், அதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். வட மாகாணத்தில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக அழிவடைந்த பயிர்செய்கைகள், விவசாயக்குளங்கள், கடற்றொழில்சார் வீதிகள், உபகரணங்கள் போன்றவற்றிற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் இன்று பாராளுமன்றில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். அவருக்கு விளக்கமளிக்கும் வகையில், அமைச்சர் பி.ஹரிசன் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.