அலுகோசு பதவிக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறுகிறது

அலுகோசு பதவிக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறுகிறது

by Staff Writer 08-02-2019 | 3:24 PM
Colombo (News 1st) அலுகோசு பதவிக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் விண்ணப்பங்களை கோரவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மரண தண்டனையை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கையை இலகுபடுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன் பிரகாரம், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அலுகோசு பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இதேவேளை, தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக ஒழுங்குபடுத்துமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைவாகவே, இந்த பணிகள் முன்னெடுக்கபட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை பெற்ற 17 கைதிகளின் பெயர்ப்பட்டியல் கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கமையவே மரண தண்டனை கைதிகளின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.