by Staff Writer 07-02-2019 | 8:58 PM
Colombo (News 1st) ஹட்டன் - பத்தனை ஶ்ரீபாத கல்வியற்கல்லூரியில் மது அருந்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு உத்தியோகத்தர்களுக்கும் இன்று இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வியற்கல்லூரிகள் ஆணையாளர் K.M.H. பண்டார தெரிவித்தார்.
தற்போது முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மதுபோதையுடன் ஊழியர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு கோரி ஆசிரிய மாணவர்கள் இன்றும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ஆசிரிய மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று முந்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே, ஊழியர்கள் மதுபோதையுடன் கலந்துகொண்டதாக கல்வியற்கல்லூரி ஆணையாளர் K.M.H. பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட குழுவினால் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.