சரத்என் சில்வாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

by Staff Writer 07-02-2019 | 1:05 PM
Colombo (News 1st) முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இன்று (07) தீர்மானித்துள்ளது. குறித்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, மூர்து பெர்னாண்டோ மற்றும் இ.ஏ.ஜி.ஏ. அமரசேகர உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுவதாக நீதியரசர் பிரியந்த ஜயவர்தன இன்று உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இதனால், குறித்த மனுவை வேறொரு தினத்தில் பரிசீலனைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சரத் என் சில்வா சிவில் ஆடையில் வருகைதந்து சட்டத்தரணி ஆசனத்தில் அமர்ந்தமை தொடர்பில் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மன்றில் கண்டனம் வௌியிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி மருதானை சந்தியில் வைத்து தேசிய ஒருமைப்பாட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் நிகழ்த்திய உரையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்டதாக சரத் என் சில்வா மீது குறித்த மனுவில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர உள்ளிட்ட மூவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சரத் என் சில்வாவின் சட்டத்தரணி தரத்தை நீக்காமல் இருப்பதற்கான காரணத்தை குறிப்பிடுமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதிவாதி இவ்வாறான நடவடிக்கையில் மீண்டும் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.