மீன்பிடிப் படகுகளின் பரிமாறல் நடவடிக்கைக்கு தடை

மீன்பிடிப் படகுகளை விற்றல், பரிமாறல் நடவடிக்கைகளை மாவட்ட அலுவலகங்களூடாக மேற்கொள்ள தடை

by Staff Writer 07-02-2019 | 7:46 AM
Colombo (News 1st) மீன்பிடிப் படகுகளை விற்பனை செய்தல் மற்றும் பரிமாறல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாவட்ட அலுவலகங்களினூடாக மேற்கொள்கின்றமை இன்று (07) முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீன்பிடிப் படகு கொள்வனவின்போது இடம்பெறும் முறைகேடுகள் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாப்பத்திரண தெரிவித்துள்ளார். படகுகளை விற்பனை செய்தல் அவ்லது பரிமாற்ற நடவடிக்கைகளுக்காக மாவட்ட உதவிப் பணிப்பாளரின் சிபாரிசினை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, மாவட்ட உதவிப் பணிப்பாளரின் சிபாரிசுடன் கொழும்பு தலைமை காரியாலயத்துக்கு வருகைதந்து, அங்கு முன்னெடுக்கப்படும் முறையான ஆய்வின் பின்னரே படகுகளை விற்பனை செய்யவோ பறிமாறவோ சந்தர்ப்பம் கிடைக்கும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான தலைமை அலுவலகத்தில் விசேட அதிகாரிகள் குழுவொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாப்பத்திரண மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அனைத்து மாவட்ட காரியாலயங்களுக்கும் ஆலோசனைப் பத்திரம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.