மாத்தறை மாவட்ட அதிசிறந்த பாடசாலை வீராங்கனைக்கான தங்கப்பதக்கம் ஹசந்தி மதுமாலி வசமானது

by Staff Writer 07-02-2019 | 1:42 PM
Colombo (News 1st) ஸ்போட்ஸ் பெஸ்ட் - அலியான்ஸ் பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் இன்றைய ஊக்குவிப்பு செயற்றிட்டம் மாத்தறையில் இடம்பெற்றது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேசிய ரீதியில் பிரகாசித்த வீர, வீராங்கனைகளை வாழ்த்திக் கௌரவிக்கும் பொருட்டு ஸ்போட்ஸ் பெஸ்ட் இந்த ஊக்குவிப்பு செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது. இன்றைய 23ஆம் நாளுக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம் மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் நடாத்தப்பட்டது. இன்றைய நாளுக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டத்தில் கல்வித் திணைக்கள அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா மற்றும் அலியான்ஸ் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். மாத்தறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு றக்பி, கால்பந்தாட்டம் மற்றும் பேஸ்போல் உள்ளிட்ட விளையாட்டுக்களின் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மாத்தறை மாவட்டத்தின் அதிசிறந்த பாடசாலை வீராங்கனைக்கான தங்கப்பதக்கத்தை, மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரியின் மெய்வல்லுநர் வீராங்கனையான ஹசந்தி மதுமாலி சுவீகரித்துள்ளார். இதன்பின்னர் நம்பிக்கையின் சுடர் வாகனத்தொடரணி காலி நோக்கிப் பயணமாகியுள்ளது.