திறமையை வௌிப்படுத்தும் எதிர்பார்ப்பில் சிராஷ்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திறமையை வௌிப்படுத்தும் எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக மொஹமட் சிராஷ் தெரிவிப்பு

by Staff Writer 07-02-2019 | 1:30 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திறமையை வெளிப்படுத்தும் எதிர்ப்பார்ப்பில் காத்திருப்பதாக, இலங்கை அணி வீரரான மொஹமட் சிராஷ் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெயரிடப்பட்ட இலங்கை வீரர்கள் இன்று (07) அதிகாலை அந்நாட்டுக்கு பயணமாகினர். மிலிந்த சிறிவர்தன, கௌசால் சில்வா, ஓசத பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சிராஷ் ஆகிய வீரர்களே இன்று அதிகாலை தென்னாபிரிக்கா நோக்கி பயணமாகியுள்ளனர். எனினும், டெஸ்ட் தொடரில் பெயரிடப்பட்ட ஏஞ்சலோ பெரேரா மற்றும் லசித் எம்புல்தெனிய உள்ளிட்ட வீரர்கள் எதிர்வரும் தினங்களில் தென்னாபிரிக்காவுக்கு பயணமாகவுள்ளனர். இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு பயணமாகவுள்ளனர். அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் விளையாடிய தினேஸ் சந்திமால், தில்ருவன் பெரேரா, ரொஷேன் சில்வா உள்ளிட்ட வீரர்கள் இந்தத் தொடருக்கான இலங்கை குழாத்தில் பெயரிடப்படவில்லை. தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை திமுத் கருணாரத்ன வழிநடத்தவுள்ளார்.
முதல்தர கிரிக்கெட் தொடரில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தினோம். அணி என்ற ரீதியில் சில வீரர்கள் தென்னாபிரிக்கா நோக்கி பயணமாகின்றோம். ஏனைய அனைவரும் அவுஸ்திரேலியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு வருகைதரவுள்ளனர். அணி என்ற ரீதியில் ஒன்றிணைந்து விளையாட எதிர்ப்பார்க்கின்றோம். கடந்த காலங்களில் பின்னடைவுக்கு உள்ளானோம். எனினும், வெற்றி தொடர்பிலேயே சிந்திக்கின்றோம். அதுவே எம் அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும். எனவே இந்தத் தொடரில் திறமையை வெளிப்படுத்தி வெற்றியீட்டவே எதிர்ப்பார்க்கின்றோம்
என இலங்கை டெஸ்ட் அணியின் வீரரான மிலிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி டேர்பனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.