பிலியந்தலையில் 110 கிலோகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது

by Staff Writer 05-02-2019 | 5:09 PM
Colombo (News 1st) பிலியந்தலையில் 110 கிலோகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலுக்கமைய, வௌிநாட்டவர் போன்று மாறுவேடத்தில் சென்ற அதிகாரியொருவர் வெள்ளவத்தையில் 10 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் இருவரை கைது செய்ததாக கலால்வரி திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து, கெட்டபுவான பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஹெரோயின் போதைப்பொருள் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெமிலஸ் எனப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தற்காரர் ஒருவரால் இந்த போதைப்பொருள் கடத்தலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து செல்வதாக கலால்வரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.