தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

by Staff Writer 05-02-2019 | 7:14 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று முற்பகல் நடைபெற்றது. தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக இந்த கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பதற்கான பாராளுமன்ற அனுமதியை பெற்றுக்கொள்ளும் பிரேரணையை சபநாயகரிடம் அண்மையில் கையளித்தார். அது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.