இராணுவ வீரர்களின் உடல்களைக் கொணர்வதில் தாமதம்

மாலியில் கொல்லப்பட்ட இலங்கை இராணுவ வீரர்களின் உடல்களைக் கொண்டு வருவதில் தாமதம்

by Staff Writer 02-02-2019 | 3:46 PM
Colombo (News 1st) மாலியின் டுஎன்ட்ஸா பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைப்பிரிவில் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினர் இருவரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வௌியாகியுள்ளன. சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான விமான ஒழுங்கு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கலே இதற்கான காரணமென இராணுவ ஊடகப்பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார். குறித்த இராணுவத்தினரின் சடலங்கள் இன்று மாலை நாட்டிற்கு கொண்டுவரப்படும் என இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 25 ஆம் திகதி மாலியின் டுஎன்ட்ஸா பகுதியில் இலங்கை இராணுவத்தினரின் ட்ரக் வண்டி மீது தொலைதூரத்திலிருந்து அதி நவீன மற்றும் அதிசக்தி வாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 இராணுவ உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர்.