கணினிகளிடையே பரவும் 'ரம்பா' வைரஸ்

கணினிகளிடையே பரவும் 'ரம்பா' வைரஸ்

by Staff Writer 02-02-2019 | 3:27 PM
Colombo (News 1st)  கணினிகளிடையே பரவும் 'ரம்பா' எனப்படும் வைரஸினால் வின்டோஸ் 7 , வின்டோஸ் 8.1 மற்றும் வின்டோஸ் 10 ஆகிய பதிப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கணினிகளில் இலவசமாக தரவிறக்கம் செய்யப்படும் இணைப்புகள் ஊடாக ரம்பா வைரஸ்  நுழைவதாக இலங்கை கணினி அவசரப் பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்தார். தரவிறக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் டொரன்ட் என்ற செயலிகளினால் குறித்த வைரஸ் வேகமாக பரவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வைரஸ் தொற்றினால், கணினிகளில் உள்ள ஆவணங்கள், நிழற்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை திறக்க முடியாத நிலை ஏற்படும். அந்த ஆவணங்களை மீளவும் பார்வையிடுவதற்கு ஒரு தொகை பணம் செலுத்த வேண்டும் என கோரப்படுகின்றது. இவ்வாறு பணம் கோரப்படுமாயின் பணம் செலுத்த வேண்டாம் என பயனாளர்களுக்கு இலங்கை கணினி அவசரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு இலவச தரவிறக்கங்களை தவிர்க்க வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கிய ஆவணங்களை கணினியுடன் தொடர்புபடாத வகையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை கணினி அவசரப் பிரிவு தெரிவித்துள்ளது.